அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் ‘சேவை உரிமை’ சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவுள்ளது.
இந்தச் சட்டத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகள் வழங்கும் சேவைகளுக்கு கால வரம்பு நிர்ணயிக்கப்படும். அந்தக் காலக்கெடுவுக்குள் சேவைகளை வழங்குவதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் சேவைகள் வழங்கப்படாத பட்சத்தில், அதற்கான புகார்கள் மற்றும் மேல்முறையீடுகளை பரிசீலிக்கும் நடைமுறைகளும் இந்தச் சட்டத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வெளிப்படையான, விரைவான மற்றும் பொறுப்புமிக்க நிர்வாகச் சேவைகளை வழங்குவதுடன், அரசு அலுவலகங்களில் சேவை வழங்கும் நடைமுறையை மேலும் மேம்படுத்துவதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அரசு சேவைகளை எளிமைப்படுத்தி, பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கான முக்கிய முயற்சியாக இந்த ‘சேவை உரிமை’ சட்டம் அமையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.